Wednesday, September 5, 2018

நல்லோர் வாழ்வு



வெம்மையான ஆதவனின் கதிர்களை
தன்னகத்தே தாங்கி,

மனிதருக்கு,
தண்ணென்ற ஒளியை
வழங்கும் நிலவைப்போல,

நல்லோர் யாவரும்,
நிகழ்வுகளின் கடுமைகளைத்
தணித்து,
அண்டியோருக்கு,
நன்மைகளே, அளிப்பர்!

Wednesday, August 8, 2018

காலம் தந்த நல்வாய்ப்பு!


அவர் படித்த திருவாரூர் பள்ளியில், படிப்பு !
அவர் கரங்களால்தான்,
இருபத்திநான்கு ஆண்டுகளுக்கு முன்,
எங்கள் மணவாழ்க்கை தொடக்கம் !

களைத்துப்போன வாழ்வில்,
நினைத்துப்பார்க்க,
வசந்தங்கள் தந்தவரே!

காலம் தந்த நல்வாய்ப்பின்,
கனத்த நினைவுகளுடன்,

ஞானா.

Sunday, May 20, 2018

மனித மனங்களின் விபரீதம்!



காற்று அறியாத திசைகளா?
காலம் அறியாத மாற்றங்களா?

கடமை மறக்காத சூரியனா?
தினமும் கடக்காத நாட்களா?

இயற்கையின் போக்கு,
நியதிக்குட்பட்டே
இங்கே நடக்கும்போது,

மனித மனங்களில் ஏன் விபரீதம்!?
நிரந்தரம் போலே எண்ணி,
ஆட்டங்கள் ஆடுவதும், 
எளியோரை வதைப்பதும்,
அறிவீனமே!

காலங்கள் மாறும்போது,
வயது முதிர்வில்
ஞானோதயம்
கிடைக்காவிட்டாலும்,
செயல்களின் வலிமை வாட்டும்!

மனதை வளமாக்கி,
மக்கள் பணிகளில் மூழ்கினால்,
மனமது செம்மையாகும்!

அமைதியான 
தன்னலமற்ற 
பொதுவாழ்வின் 
பொருளும் விளங்கும் !



Tuesday, May 1, 2018

பயத்தை எதிர்கொள்வது எப்படி?


பயத்தை எதிர்கொள்வது எப்படி?

உங்கள் புன்னகை, ஒருவரின் நல்ல நாளை உருவாக்கும் - நயெல்லா.

தன்னம்பிக்கை பயிற்சியாளர், ஊக்கசக்தி மற்றும் விழிப்புநிலை பயிற்சியாளர்.


நயெல்லா, பெயர் நமக்கு பரிச்சயமில்லாவிட்டாலும், இவர் அளிக்கும் பயிற்சிகள், நம்மில் பலருக்கும் தேவைப்படும், அத்தியாவசியமான ஒன்றாகும்.

போட்டிகள் நிறைந்த இன்றைய உலகில், பலரும் மன அழுத்த பாதிப்பில் சிக்கியிருப்போம், இலக்குகளை அடைவதில் ஏற்படும் குறுக்கீடுகள், தடைகளால் மனம் கலங்கி, செயலை முடிக்கமுடியாமல் போய்விடுமோ என்ற பயத்தில் பலரும், தடுமாறி நிற்கிறார்கள்.

பலருக்கும் ஏற்படும் பொதுவான இந்தப் பிரச்னைகளை, சரியாக கணித்து, அவர்களை தட்டிக்கொடுத்து, முன்னேற வைக்க, இங்கே யாருக்கும் நேரமில்லை, அதற்கான ஆட்களும் அதிகமில்லை.

இதுபோன்ற தடைகளில் துவண்டு, தோல்விகளில் உழலும் நண்பர்களுக்கு, ஆறுதலாக, அவர்களின் தடையை உடைத்து, பயத்தை நொறுக்கி, இலக்கை நோக்கி விரைந்து முன்னேறவைக்க தக்க அனுபவம் மற்றும் மனித மனவளங்களை சிறப்பாக வழிநடத்தத் தெரிந்த ஆற்றல்மிக்கவர்கள் தான், தன்னம்பிக்கை பயிற்சியாளர்கள்.

புற்றீசல் போல பலரும்,  நம்மைச்சுற்றி, தாம் மனநல கோச், தன்னம்பிக்கை பயிற்சியாளர் என்று கூறி, பணத்தைக் கறப்பதிலேயே குறியாக இருக்கும் கால கட்டத்தில்,

இங்கிலாந்து தேச உளவியல் பயிற்சியாளர். நயெல்லா அவர்கள், தமது பயிற்சிகளை இணையத்தில், யூடியூப் தளத்தில், மக்கள், இலவசமாகப் பார்த்து பயன்பெற வைத்திருக்கிறார்.

அதில் உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வுகளை அறிந்து, நீங்களே உங்களை மாற்றிக்கொள்ளமுடியும்.

இல்லையென்றால், இவரிடம் சில மணி நேர நேரடிப்பயிற்சிகளை மேற்கொண்டாலே, இழந்த வாய்ப்புகளை மீண்டும் அடைந்து, வெற்றி இலக்கை அடைவது உறுதி.

வீடியோவில் பயிற்சியாளர் சொல்லும் எளிமையான கருத்துகளை, அமைதியாகக் கேளுங்கள்.வாழ்வில் கடைபிடித்து வெல்லுங்கள்.

இவருடைய யூடியூப் தளத்தில், பல வீடியோ தொகுப்புகள் இருந்தாலும், அதில் ஒரு தொகுப்பை இங்கே காண்போம்.

பயத்தை எதிர்கொள்ளுங்கள்.

நம்மில் நிறையபேர், தோல்வியை சந்திக்கத் தயங்கி, அதனால் ஏற்படும் பயத்தையும் விட்டு விலகி ஓட, எண்ணுகிறோம். அதுவே, நாம் செய்யும் தவறு, நம்மை தோல்விக்கு அழைத்துச்செல்ல நாமே வழி ஏற்படுத்துகிறோம், என்கிறார், தன்னம்பிக்கை பயிற்சியாளர். நயெல்லா.

இதுபோன்ற கருத்துகளை, கீழேயுள்ள லிங்கை க்ளிக் செய்து, கேளுங்கள்.


விளக்கம் தேவைப்பட்டால், ஈமெயிலில் தொடர்பு கொள்ளலாம், தேவையெனில், நேரடியாக, பயிற்சியும் எடுத்துக்கொள்ளலாம். சில மணி நேரப் பயிற்சிகளின் மூலம், பெருமளவு நன்மைகளைத் தொடர்ந்து பெற, உங்களுக்கு எளிய வழிகளை, வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய அவசியத்தைக் கூறி, அவற்றை தினமும் கடைபிடிக்க வைத்துவிடுவார்.


Nayalla, Motivator, 

Confidence, Empowerment and Happiness Coach,
Intuitive Readings.




தோல்வியில் உழன்று,
வாழ்வில் வெற்றிபெறத்
துடிக்கும் இளைஞர்களே! இளைஞிகளே!,
மற்றும் பல நிலைகளில் உள்ளோரே!
உங்களை நீங்களே, ஒரு முறை உரசிப் பார்த்துக்கொள்ள ஒரு வாய்ப்பு!

இலக்கை அடையும் காலத்தை, நீங்களே முடிவு செய்யமுடியும்!.


வாழ்த்துக்களுடன்,

ஞானா.

Gnaana.

Wednesday, February 14, 2018

தன்னம்பிக்கை புத்தகம் 

ஆன்மா வாழ்க்கையானபோது..!
கெய்லி ரியோர்டன் . 



உலகில் இன்று, அன்பு, சமத்துவம், கருணை எல்லாம் செல்லாக்காசாகிப் போன தருணத்தில்,  நல்ல உள்ளங்களுக்கு எல்லாம் நன்னம்பிக்கை தருவதுபோல், சிலர் தங்கள் நல்ல எண்ணங்களை, உலகின் மேல் தங்களுக்கு இன்னமும் இருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்தும் வண்ணம், செயல்பட்டு வருகின்றனர்.

அப்படி ஒருவராக, ஆன்மா வாழ்க்கையானபோது,,!, எனும் நன்னம்பிக்கை நூலின் ஆசிரியர் திகழ்கிறார்.

நம்மில் பலருக்கு, இன்னும் ஆன்மா என்றால் மிக அதிக பயம் உண்டு, 
அது நம்மில் ஒன்றுதான், நம் உணர்வில் ஒன்றுதான், என்று அறியாமல், அதை நமக்கு அந்நியமாகப் பார்ப்பதன் விளைவே, இன்றைய நாகரிக வாழ்வின் இன்னல்கள்.

ஆன்மா என்பது ஏதுமல்ல, நாம்தான் அது, நாம் எப்படி இருக்க வேண்டும் என்று சமயங்களில் எண்ணுவோமே, அந்த எண்ணம்தான், 
அந்த சிந்தனையைத் தூண்டுவதுதான் ஆன்மா!

புரிந்துகொண்டால், நம் அளவில் நாம் பக்குவப்படுவோம்!
நாம் பக்குவப்பட்டால், நாம் மட்டுமா, நமது குடும்பம் , உறவுகள், நட்புகள் மற்றும் காணும் மனிதரையெல்லாம், நல்லவற்றின் பால் ஈர்க்க முடியுமே!

அதன்பின்னர், இந்த உலகம், சொர்க்கமாக மாறுமே!
எங்கும் அமைதியும், இன்பமும் தங்குமே!

நீங்களும், இந்த அற்புத அனுபவத்தைப் பெற முடியும்!




ஆன்மா வாழ்க்கையானபோது..!
கெய்லி ரியோர்டன் .

எனும் நூல் தற்போது, அமேசான் வலைத்தளத்தில் கிடைக்கிறது. வாங்கிப் படித்து, மற்றவர்களுக்கும், நல்ல வாழ்க்கையின் நன்மைகளை, நல்வாக்கு தரும் எண்ணங்களின் அருமைகளை, விளக்குங்கள்!

நாளை ஆரம்பிக்க நினைத்ததை இன்றே ஆரம்பித்தால், 
நன்மைகள் இன்றே வந்து சேரும் அன்றோ!

ஆன்மா வாழ்க்கையானபோது..!
கெய்லி ரியோர்டன் . 

புத்தகத்தை ஆன்லைனில் வாங்கிட,  கீழே உள்ள இணைப்பை, அழுத்தவும்!


நல்ல எழுத்தை எங்கும் சேர்க்க எண்ணியே, இந்தப்பதிவு!

மனிதமும் மனிதாபிமானமும் செழிக்கட்டும்!

நன்றி!

Gnaana.

Monday, February 12, 2018

முன்னொரு காலத்தில்..


வழியெங்கும் தோரணங்கள்!

வாசலெங்கும் மாக்கோலங்கள்!
வீடெல்லாம் பிள்ளைகளின் உற்சாகக் கூச்சல்கள்!
பண்டிகை காலத்தைக் கட்டியம் கூறும்
சமூக நிகழ்வுகள்!
கண்டதும் அறிந்ததும்,
பழங்கதையானதே!

இன்றும்...

தோரணங்கள்! கோலங்கள்!
அலங்காரங்கள்!
வீடெங்கும் உற்சாகக் கூச்சல்கள்!
பிள்ளைகளா..?,
இல்லையில்லை,
பிள்ளைகளை பெற்றோர் !

ஒட்டு கேட்டு வாசலுக்கு,

வந்துவிட்டாராம்!

கேட்காமலே,

கொடுத்தும் விட்டனராம்!
குதூகலம்!
விட்டில்கள் விழுவதைப்போல!

Sunday, January 28, 2018

புலனடக்கம் இல்லா, தவம்!

மனிதர் நல்வழி வாழ வேண்டிய அவசியத்தை விளக்கும் தொன்மையான நீதிநெறி நூல், ஏலாதி.

ஆறு வகை மூலிகைகள் சேர்ந்த மனிதர் உடல் நலம் காக்கும் மருந்தை, ஏலாதி என்பர். அதுபோல, ஆறு வகையான தத்துவங்கள் மூலம் மனிதர் வாழ்வு செழிக்க வழிகாட்டும் நூல் ஏலாதி ஆகும்.

பதினெண்கீழ்க்கணக்கு நூலான ஏலாதியின் ஒவ்வொரு பாட்டிலும் ஆறு தத்துவங்கள் இருக்கும், அவற்றை வாழ்வில் கடைபிடித்தால், வாழ்வு சிறப்பாகும் என்றனர், நம் முன்னோர்.

காலம் கடந்து தற்கால வாழ்வுக்கும், அதன் பல பாடல்கள் பொருந்துகின்றன, அப்படி ஒரு பாடல் இதோ!

புலன் வழியில் செல்லும் வாழ்க்கையின் துன்பம்.
எழுத்தினால் நீங்காது, எண்ணால் ஒழியாது, ஏத்தி
வழுத்தினால் மாறாது, மாண்ட ஒழுக்கினால்,
நேராமை,சால உணர்வார் பெருந்தவம்,
போகாமை, சாலப் புலை.

பிறப்பில்லாப் பெருவாழ்வு தேடுபவர்களின் வாழ்க்கைத்துன்பங்கள், கற்ற கல்வியினாலோ, ஈடுபடும் தியானத்தினாலோ, இறை புகழ் பேசுவதாலோ தீராது, ஐம்புலன்களையும் அடக்கி, மேற்கொள்ளும், தூய்மையான தவத்தால் மட்டுமே, விலகும்.

பிறந்த பிறவியின் துன்பங்கள் விலக, புலனடக்கம் இன்றி, மனதின் எண்ணங்களின் வழியே பிறவியைக் கழிக்கும் மனிதர்களின் இறை நாட்டம், மிகவும் தவறு என்கிறது, ஏலாதி நீதிநெறி நூல்.

Saturday, January 27, 2018

ஆசிரியர் இல்லா வகுப்பறை!

எங்கெங்கு நோக்கினும்,  எல்லோரும் 
தன்னிலை கடக்கிறார்கள்!
சுய ஒழுக்கம் மறக்கிறார்கள்.

இயல்பை மீற, எல்லோருக்கும் 
ஒரு காரணம் இருக்கிறது!

நித்தம் ஒரு கூட்டம், 
சமூக வெளியில் தம் 
பக்குவம் காட்ட,

பாயும் ஊடகங்கள், 
ரேட்டிங் இரை தேடுவதில், 
கடமையை மறக்கும் 
அவலம் எங்கினும் !

ஆன்றோரும் சான்றோரும் 
வழி நடத்திய  எம் தேசம்,
இன்று,

ஆசிரியர் இல்லாத 
வகுப்பறை!

கண்டிப்பார் இல்லா 
காட்டுக்கூச்சல் 
காதைப் பிளந்தாலும்,

விரைவில் ஆசிரியர், 
நிச்சயம் வருவார்!

கையில் பிரம்புடன், கண்டிப்பாக..!









Thursday, January 25, 2018

இப்போது புதிதாக!





இப்போது புதிதாக,
இந்த வினாடி,
தொடங்குவோம், வாருங்கள்!

யார் பெருமை கொண்டாடினாலும், யார் சொந்தம் 
கொண்டாடினாலும், நாம் அதை எண்ணாமல் 
அடிக்கல்லை நாட்டுவோம்!

நாமறிவோம், ஆரம்பத்துக்கும், 
அடிக்கல் நாட்டுவதற்கும்
வராத கூட்டங்கள், 

உயர்ந்தபின், பெருமை பேசும் என்பதை!
அதைப் பற்றி என்னாது, செல்லும் வழியை மனதில்
நிறுத்தினால், எல்லோர்க்கும் நலமே விளையும்!

சுயநலம் விடுத்த 
பொதுநலம் காப்போம்!

கால வெள்ளத்தில் நாம், 
ஒரு துகள் கூட அல்ல, 
என்பதை உணர்ந்து,

மமதையை அழித்து,
மனிதம் போற்றுவோம்!!

Monday, January 22, 2018

தாய்!




அன்பின் வடிவம், 
அஹிம்சையின் தத்துவம்!

தன்னலம் கருதா, 
தூய உள்ளம்!

என்றும் தாய், 
தாய்தான்!

எண்ணங்களில் ஏற்றம் 
கொண்டால்,
எல்லாம் வளமாகும்!

பெண்ணும் தாயாவாள்!


* Pencil Art Courtesy - Melissa.Barreiro. USA.

Tuesday, January 16, 2018


எழுத்தும் கலையும்
தனி நபரின் திறமையால் 
விளைந்த நல்விளைச்சலாக, இருக்கலாம்!

விளைச்சலில், களையை
யாராவது அறுவடை செய்வார்களா?

பிறரை பாதிக்கும் 
தனிமனித கருத்துக்களும்,
அவ்வண்ணமே!

மனிதம் பேணுவோம்!





Sunday, January 14, 2018




அன்பர் 
அனைவருக்கும் 
தித்திக்கும் 
தைப்பொங்கல் 
தமிழர் திருநாள் 
நல்வாழ்த்துக்கள்!

பொங்கிடும் பொங்கலைப் போல,
இன்பங்கள் எங்கும் தங்கிடட்டும்!


வளங்களும் நலங்களும் சேர்ந்து 
நலமுடன் வாழ, கைக்கொள்ளும் 
முயற்சிகள் யாவும் கைகூடட்டும்!!


 தைப்பொங்கல்  திருநாள் நல்வாழ்த்துக்களுடன் .!

 ஞானா.




Total Pageviews